வேதாகமம் உருவான கதை - பாகம் 1






அச்சு இயந்திரம் கண்பிடிக்கப்பட்ட பின் முதல் அச்சிடப்பட்ட புத்தகம் வேதாகமம். உலகம் முழுவதும் அச்சிடப்படும் ஒரே புத்தகம் வேதாகமம். இன்றய உலகத்தில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே புத்தகம் வேதாகமம். உலக முழுவதும் அதிகமாக விற்பனையாகும் ஒரே புத்தகம் வேதாகமம். அதிகமான மக்கள் வாசிக்கும் ஒரே புத்தகம் வேதாகமம்.

கி.பி 2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி உலகத்தில் 6877 மொழிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 518 மொழிகளில் முழு வேதாகமமும், ஏறக்குறைய 2798 மொழிகளில் வேதாகமத்தின் சில பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்கிறது விக்கிபிடியாவின் கணக்கீடு. 


அப்படி என்ன இருக்கிறது இந்த புத்தகத்தில் என்று கேட்க தோன்றுகிறது அல்லவா? சொல்கிறேன். உலகம் தோன்றிய கதையை சொல்லும், உலகத்தின் முடிவை தெளிவாய் சொல்லும், வந்தவர்கள் கதையை விளக்கி சொல்லும், போனவர்கள் கதையை எடுத்து சொல்லும், வருபவர்கள் கதையையும் குறிப்பால் சொல்லும். இது இறந்த கால வரலாறு. நிகழ்காலத்தின் கண்ணாடி, இது எதிர்காலத்தின் ஜோதிடம். இது தான் ஒட்டுமொத்த உலக கிறிஸ்தவர்களும் மார்தட்டி கொள்ளும் செய்தி.

வேதாகமமானது பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்த மக்களை வழி நடத்த தீர்க்கதரிசிகளால் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டது என்பது இரண்டாயிரம் ஆண்டு கிறிஸ்தவ சாம்ரஜ்ஜியத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. 


இதை எல்லோருக்கும் விளங்கும் படி சொல்வதென்றால் கடவுள் மனிதனுக்கு எழுதிய கடிதம் என்று சொல்லலாம். சற்று யோசித்து பாருங்கள் நீங்கள் உங்கள் வருங்கால தலைமுறைகளுக்கு ஒரு செய்தியை விட்டு செல்ல நினைக்கிறீர்கள். இன்னும் நூறு ஆண்டுகளுக்கு அந்த செய்தி அழியாமல் இருக்க வேண்டும். அப்படி என்றால் அந்த செய்தியை எந்த வகையில் கொண்டு செல்வீர்கள். முதலில் மொழி முக்கியம். அந்த மொழி நூறு ஆண்டுகளுக்கு அழியாமல் இருக்க வேண்டும். அடுத்து கொண்டு செல்லும் ஊடகம் முக்கியம் அதாவது மீடியா. (காகிதம், குருந்தகடு, இணையதளம் போன்றவை) 

ஒரு சாதாரண மனிதனே நூறு ஆண்டுகள் கடந்து ஒரு செய்தியை எடுத்து செல்ல இவ்வளவு விஷயங்களை யோசிக்கும் பொழுது எல்லாம் வல்ல இறைவன் எவ்வளவு யோசிப்பார். அவர் தர நினைத்த செய்தியானது ஒட்டு மொத்த உலகத்திற்க்குமானது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்த செய்தி காக்கப்பட வேண்டும், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்த செய்தியை கொண்டு செல்லும் மொழியோ, செய்தியின் மூலமோ அழியாமல் இருக்க வேண்டும், விஞ்ஞான உலகம் அதை நம்ப வேண்டுமென்றால் அதிலே முறண்பாடுகள் இருக்க கூடாது, கீழே உள்ள வசனத்தை பாருங்கள்.

வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுபாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 5:18

அழிய வாய்பே இல்லை என்பதை இந்த வசனம் தெளிவாக கூறுகிறது. அழிந்ததாக நிறுபித்துவிட்டால் கர்த்தர் கூறியது பொய்யாகிவிடும். கர்த்தர் பொய் கூற வாய்பில்லை. அப்படி என்றால் மேலே உள்ள வசனத்தில் கூறப்பட்டுள்ள நியாயப்பிரமாணம் நாம் கையில் வைத்திருக்கும் வேதாகமம் அல்ல என்றாகிவிடும்.

நாங்கள் கடவுளை நம்புகிறோம். அவரை அன்பு செய்கிறோம் ஆனால் இந்த வேதாகமத்தில் ஏராளமான முறண்பாடுகளும், எண்ணற்ற பிழைகளும், அருவருக்க தக்க செய்திகளும் காணப்படுவதால் இது நிச்சயம் கடவுளால் எழுதப்பட்டதாக இருக்க முடியாது என்கிறோம். விடை தர இயலாத வினாக்களுக்கெல்லாம் இறை நம்பிக்கை என்ற வார்த்தையை வைத்து சப்பைகட்டு கட்டாமல் தகுந்த ஆதாரங்களுடன் நிருபித்து காட்டுகிறோம்.

நீங்கள் கிறிஸ்தவர்கள் என்னும் போர்வையை கலற்றி வைத்துவிட்டு நடுநிலையோடு பின் வரும் செய்திகளை சிந்தித்து பாருங்கள். நாங்கள் பரிசுத்த வேதாகமத்தின் மீது பொய் குற்றம் சுமத்தியதாக நினைத்தால் நீங்கள் தக்க ஆதாரங்களுடன் எங்களுக்கு மின் அஞ்சல் செய்யுங்கள். நாங்கள் விளக்கம் அளிக்கிறோம். தவறுகள் இருப்பின் திருத்தி கொள்கிறோம்.


 
                         

No comments:

Post a Comment